உயிர்பின் ஞாயிறு 2020

உயிர்பின் ஞாயிறு. ஒரு உறவின் ஞாயிறு. வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார் - யோவான் 20:1. காலியாகக் கிடந்த இயேசுவின் கல்லறை இயேசுவின் உயிர்ப்பை எடுத்துரைத்தது. 

பேதுருவுடன் இயேசுவின் கல்லறைக்குச் சென்ற அன்புச் சிடர் யோவான், கல்லறைக்குள் சென்றார், கண்டார், நம்பினார்" (யோவா 20:8), அவர் கண்டதோ காலியான கல்லறை: ஆனால் அவர் நம்பியதோ உயிர்த்த இயேசுவை. எனவே, காலியான கல்லறையே இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சியம் பகர்ந்தது. ஆக, இல்லாத ஒன்று இருக்கின்ற மற்றொன்றை அவருக்குச் சொல்லிவிடுகிறது. ஒன்றும் இல்லாமையிலிருந்து உலகம் உண்டானது. இருளிருந்து ஒளி உண்டானது.

இயேசு சாவை வென்றார். பாவத்தை வென்றுவிட்டார். எல்லா நோய்களையும் வென்று விட்டார். எல்லா அடிமைத்தனத்தையும் வென்றுவிட்டார். கிறிஸ்து உயிர்க்கவில்லை என்றால் நற்செய்தியும் பயனற்றது, நமது நம்பிக்கையும் பயனற்றது. நாம் திருமுழுக்குப் பெற்றபோது இயேசுவின் சாவிலும் உயிர்ப்பிலும் பங்கு பெற்றுள்ளோம். அவரோடு நாம் இறந்து விட்டோம் என்றால், அவரோடு உயிர்ப்பது நிச்சயமாகி விட்டது ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அல்லேலூயா பாடுவோம்.

ஜெபம்: ஆண்டவரே, உம்மை போற்றுகிறோம். உம்மை புகழ்கிறோம். உமக்கு நன்றி கூறுகிறோம். ஆண்டவரே  எங்களுக்கு நீர் பாவத்திருந்து, நோயிலிருந்து, பயத்திருந்து, அறியாமைலிருந்து, விடுதலையை கொடுத்து உமது உயிர்ப்பின் வெற்றியை நாங்கள் அனுபவிக்க செய்ததற்காக நன்றி. ஆமென். அல்லேலூயா.