நிறைவான மகிழ்ச்சிக்கு...

என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன் - யோவான் 15:11. இயேசு  தம்முடைய சந்தோசத்தை நமக்குக் கொடுக்கிறார். நம்முடைய சந்தோசம் நிறைவாயிருக்கும்படி செய்கிறார். பிதாவின் விருப்பத்தை செய்து முடிப்பதே இயேசுவுடைய விருப்பம், மகிழ்ச்சி எல்லாம். நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன் என்று இயேசு சொல்கிறார்.

பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன்’ என்பது தான் இயேசுவின் கடைசி வார்த்தையாயிருந்தது. நாமும் பிதாவின் விருப்பத்தை செய்யும்போது, கிறிஸ்துவின் சந்தோசத்தில் நிலைத்திருப்போம்.

இயேசுவின் சந்தோசமானது, மற்றவர்களுக்கு தாராளமாய்க் கொடுப்பதில் அடங்கியிருந்தது. சுகவீனருக்கு சுகத்தையும், கட்டுண்டவர்களுக்கு விடுதலையையும், கண்ணீரில் வாழுகிறவர்களுக்கு ஆறுதலையும் கொடுத்ததோடல்லாமல் சந்தோசத்தோடு தன்னையே நமக்காகக் கொடுத்தார். நாமும்  மற்றவர்களுக்கு பொருள் கொடுப்பது மட்டுமல்ல, நமது நேரத்தையும் செலவிடவேண்டும்.  அப்போது நம் மகிழ்ச்சி இன்னும் அதிகமாகும்.  நமது சந்தோசம் இன்னும் நிறைவாகும்.

செபம்: அன்பு ஆண்டவரே, நீர் எங்களுக்கு மகிழ்ச்சியை தருகின்ற கடவுளாக இருப்பதால் உமக்கு நன்றி. எங்கள் வாழ்வில் ஒவ்வொன்றையும் உமது விருப்பப்படி செய்து எங்கள் சந்தோசத்தை இன்னும் நிறைவாக்க அருள்புரிய உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.