பவுல் அடிகள் கூறுவதைப்போல், ‘இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்’ (பிலி 2:10) ஆகையால், அவரது சீடர்களான நாம் ஏன் அவரது திருப்பெயருக்கு மண்டியிடக்கூடாது? மண்டியிடுவோம், பலன்களைப் பெற்று மகிழ்வோம்.
மண்ணுலகில் வாழ்ந்தாலும், மேலுலகைச் சார்ந்தவற்றையே நாம் நாட வேண்டும் என்பது சீடத்துவ வாழ்வுக்கு இன்றியமையாத வேண்டுகோள். இவ்வுலக வாழ்வு நமக்கொரு இடைப் பயணமே.
புவுல் அடிகளைப் போல் பெரிய அளவில் முடியாவிட்டாலும் நமது சுற்றுவட்டாரத்தில், நமது கிறிஸ்தவ முன்மாதிரி வாழ்வால், அன்புப் பணியால் வாழும், உண்மை கடவுளை நம்மால் எளிதாக வெளிப்படுத்த முடியும். இதற்குத் துணிவு தேவை. தூய ஆவியார் துணையின்றி நம்மால் இயங்க முடியாது. எனவே, அவரைப் பற்றிக்கொள்ளவும் அவரால் இயக்கப்பட நம்மை கையளிப்போம்.
கவலை எதற்கும் மருந்தாகாது. சிக்கலான சூழலில் மாற்றி யோசிக்கத் தொடங்கினால் சிந்தனை தெளிவுப்பெறும். ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற தன்னமில்லாத எண்ணத்தில் நற்செய்தியாளராக நம்மை நாம் மாற்றி யோசிக்க வேண்டும்.
இன்று திருஅவையில் முளைத்திருக்கும் பிரிவினைவாதிகளுக்கும் குழப்பவாதிகளுக்கும் எதிராக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இயேசு கிறிஸ்து கூறுவதைப் போல, நற்செய்திப் பணியில் எதிர்ப்புகளை எதிர்கொள்ளும்போது அவருடைய வார்த்தைகளை நினைவில் நிறுத்தி முன்னோக்கிச் செல்வோம்.